பெரம்பூர்: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு வடமாநில ரயில்கள் மூலம் கஞ்சா கடத்தி வந்து, அந்நிலையத்தின் பின்புறம் உள்ள ஜமாலியா பகுதி வழியாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் வடமாநில வாலிபர்களுக்கு சில்லறை கஞ்சா விற்பனைக்கு கொண்டு செல்வதாக நேற்று நள்ளிரவு ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, இன்று காலை ஜமாலியா பகுதியில் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காலை 6 மணியளவில் திரிபுரா ரயில் மூலம் வந்திறங்கிய 3 வடமாநில வாலிபர்கள், 2 பெரிய பார்சல்களுடன் ஆட்டோ மூலமாக ஜமாலியா பகுதிக்கு கிளம்பி சென்றனர். அந்த ஆட்டோவை ஓட்டேரி மேம்பாலம் அருகே ரோந்து பணியில் இருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சுகன்டா தாஸ் (26), லிட்டன் நமா (30), பிரசன்ஜித் டேட்டா (28) எனத் தெரியவந்தது
மேலும், இவர்கள் குருவிகளாக செயல்பட்டு, திரிபுராவில் இருந்து மொத்தமாக கஞ்சா கொண்டு வந்து, செல்போன் அழைப்பின் மூலம் யாரிடம் கொடுக்க சொல்கிறார்களோ, அவர்களிடம் கொடுத்து பணத்தை பெற்று சொந்த ஊர் திரும்பி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர் எனத் தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து, இதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.