×

சென்னையில் இருந்து புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா: அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன் தொடங்கி வைத்தனர்

சென்னை: சென்னையில் இருந்து புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா வாகனத்தை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழக சட்டப் பேரவையில் அறிவித்தபடி, ஆடி மாதம் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவ கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிக சுற்றுலாவிற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிக சுற்றுலாவினை நேற்று அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அறநிலைய துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், சுற்றுலா துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர், அஷ்டலெட்சுமி கோயில், திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம், ஸ்தல சயன பெருமாள் கோயில், சிங்கப்பெருமாள் கோயில், பாடலாத்ரி நரசிம்மர் கோயில், திருநீர்மலை, நீர்வண்ண பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கும், 2வது திட்டத்தில் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில், திருநீர்மலை, நீர்வண்ண பெருமாள் கோயில், திருமுல்லைவாயில், பொன்சாமி பெருமாள் கோயில், திருவள்ளூர், வைத்திய வீர ராகவபெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர், ஆதிகேசவ பெருமாள் கோயில், பூந்தமல்லி, வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கும் பக்தர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த 2 திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு, கோயில் பிரசாதம், கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது.

Tags : Puratasi month ,Chennai ,Ministers ,Shekharbabu ,Mathivendan , Puratasi month spiritual tour from Chennai: Ministers Shekharbabu, Mathivendan inaugurate
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...