×

அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு நவம்பருக்குள் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தர வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு, வரும் நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை  வழங்க வேண்டும் என அரசுக்கும், போக்குவரத்து கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று 2015ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  
அதன் பிறகு நான்கு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்ட போதும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை. இதையடுத்து, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஐகோட்டில்வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயண பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான வழக்கறிஞர், அகவிலைப்படி வழங்க மறுத்ததால் 86 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும், 20 ஆயிரம் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பணியில் உள்ளவர்களுக்கு அகவிலைப்படி வழங்கும் நிலையில் தங்களுக்கு வழங்க மறுப்பது பாரபட்சமானது என்றார். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிதி நெருக்கடி காரணமாக போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. மற்ற துறைகளில் போதுமான நிதி உள்ளது.  

போக்குவரத்து துறையில் அனைவருக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க 81 கோடி ரூபாய் செலவாகும் என்று வாதிட்டார். அரசுத்தரப்பின் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பலன்களை வழங்க வேண்டும் என்ற கேள்வி எழும்போதெல்லாம் நிதி நெருக்கடி என்ற பதிலையே அரசு கூறுகிறது. நிதி நெருக்கடியை காரணமாக கூறும் அரசு, சமீபத்தில் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது எப்படி. எனவே, அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வரும் நவம்பர் முதல் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Government Transport Corporation ,Government , Govt to pay increased gratuity to retired State Transport Corporation employees by November: Court orders Govt
× RELATED டிப்போவில் ஓய்வெடுத்தவரிடம் செல்போன் திருடிய பஸ் டிரைவர்