திருவள்ளூர்: புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவர் பெருமாள் கோயிலுக்கு அமாவாசை தினங்களில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று வீரராகவ பெருமாளை கோயில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்டவரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்து சென்றனர்.
நாளை மஹாளய அமாவாசை என்பதாலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதன்காரணமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சிபாஷ் கல்யாண் உத்தரவின்படி, திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன் மேற்பார்வையில், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பப்பி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.