திருவள்ளூர்: பூந்தமல்லி எஸ்.ஏ.பொறியியல் கல்லூரியின் 20 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் டி.துரைசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் டி.பரந்தாமன், செயலாளர் டி.தசரதன் பொருளாளரும், தாளாளருமான எஸ்.அமர்நாத், இணை செயலாளர் எஸ்.கோபிநாத், இயக்குனர்கள் டி.சரஸ்வதி, டாக்டர் எஸ்.அரவிந், டி.சபரிநாத், எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எஸ்.ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த விழாவில் சென்னை, ஆவடியில் உள்ள சிவிஆர்டிஇ இயக்குனரும், விஞ்ஞானியுமான முனைவர் வி.பாலமுருகன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு 886 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், அண்ணா பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த 16 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1 லட்சத்து 85 ஆயிரத்திற்கான ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கி வாழ்த்தி பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது, இன்று பட்டம் பெரும் பட்டதாரிகளை சமூகம் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறது. மேலும் அவர்கள் தங்கள் மென் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்தந்த களங்களில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு இந்திய அரசால் ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
மேலும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றிற்கு ஆலோசனைகளை வழங்கும் அளவிற்கு நீங்கள் உங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். பொறியியல் பட்டதாரிகள் அப்துல் கலாமின் பொன்மொழிக்கேற்ப கனவு காணுங்கள், அதனை நிறைவேற்றுங்கள். சிவிஆர்டிஇ யில் உங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. அதற்கு ஏற்ப நீங்கள் உங்கள் திறன்களை உணர்ந்து மெய்நிகராக உருவாக வேண்டும். வெற்றிக்கு வரம்புகள் இல்லை. நீங்கள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். எந்த உயர் பதவியை அடைந்தாலும் பெற்றோரையும், ஆசிரியர்களையும், பிறந்த ஊரையும் மறந்து விடக்கூடாது. இவர் அவர் பேசினார். முடிவில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை தலைவர் பேராசிரியர் பி.ஆர்.தபஸ் பாபு நன்றி கூறினார்.