×

ராஜிவ்காந்தி சாலை அருகே வாலிபரை கொலை செய்ய திட்டமிட்டு கத்தியுடன் திரிந்த 3 ரவுடிகள் சிக்கினர்: பைக், பட்டாக்கத்தி பறிமுதல்

வேளச்சேரி: தரமணி போலீசார்  நேற்று முன்தினம்  இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ராஜிவ்காந்தி சாலை அருகே பைக்கில் வந்த 3 பேர், பட்டாக்கத்தியை சாலையில் தேய்த்து தீப்பொறி ஏற்படுத்தியது தெரிந்தது. இவர், போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில், பெருங்குடி, கல்லுகுட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் (எ) பவர் ரமேஷ் (24), கொட்டிவாக்கம்,  அண்ணா நகரை சேர்ந்த மகேந்திரன் (எ) புள்ளி (19), சீனு (எ) குள்ளன் (19) என்பதும் தெரிந்தது.

அவர்களிடம் இருந்த பட்டாக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், பவர் ரமேஷ் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்று வந்ததும், கடந்த ஆண்டு  இவர், குண்டர் சட்டத்தில் வேளச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டதும், 20 நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்ததும் தெரிந்தது. மகேந்திரன் மீது, தரமணி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும்,  கல்லுகுட்டைப் பகுதியை சேர்ந்த நாகராஜன் (20) என்பவருக்கும், இவர்களுக்கும் முன்விரோத காரணமாக தகராறு இருந்து வந்ததும் தெரிய வந்தது. மேலும்,  நாகராஜனை கொலை செய்ய  திட்டமிட்டு கடந்த 3 தினங்களாக தேடி வந்ததும் தெரிய வந்தது.

மேலும், பட்டாக்கத்தியுடன் போட்டோ எடுத்து, ‘என்றைக்கு இருந்தாலும் ஒருநாள்  இந்த கத்தி தான் உன்னை  கொலை செய்யும்,’ என  அந்த வாலிபரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி மரண பயத்தை  ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக,  போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் இருந்து பைக் மற்றும் பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Rajiv Gandhi Road , 3 knife-wielding raiders caught planning to kill youth near Rajiv Gandhi Road: Bike, machete seized
× RELATED மூதாட்டியிடம் நகை பறிப்பு