புதுடெல்லி: கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட 10 பேர் மீது தொடரப்பட்ட லோக் ஆயுக்தா வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த 2019-2021க்கு இடையில் எடியூரப்பா முதல்வராக இருந்த போது, பெங்களூரு பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (பிடிஏ) கீழ் புதிதாக குடியிருப்பு கட்ட ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரும் கட்டுமான நிறுவன உரிமையாளருமான சந்திரகாந்த் ராமலிங்கம் உள்பட 10 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் (பிசிஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு பதிவுக்கு எதிராக ஆப்ரகான் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எடியூரப்பா உட்பட 10 பேர் மீது லோக் ஆயுக்தா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து மனுதாரர் அடுத்த 4 வாரத்தில் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.