புதுடெல்லி: பிரதமர் மோடியின் 86 உரைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் - பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்’ என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது: இந்தியாவின் எழுச்சியை இப்போது உலகம் அங்கீகரித்து வருகிறது. இந்தியாவின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல. இதற்கெல்லாம் பிரதமர் மோடியின் பல்வேறு சிறப்பான பணிகளும், அவர் மக்களுக்கு அளித்து வரும் வழிகாட்டுதல்களும், இந்தியாவின் முன்னேற்றமும்தான் காரணம். ஆனாலும், சில தவறான புரிதல்களாலும், சில அரசியல் நிர்பந்தங்களாலும் சில பிரிவினர் மோடியின் செயல்பாடுகள் குறித்து இன்னும் சில சந்தேகங்களை கொண்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த தவறான புரிதல்களும் களையப்படும். இதற்கு பிரதமர் மோடி அடிக்கடி எதிர்க்கட்சியினர் உட்பட அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.