மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் தெற்கு வெளியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நடராஜன்(32). சென்னையில் வேலை பார்த்து வருகிறார். திருவாரூர் மாவட்டம் பில்லூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகள் பிரவீனா(30). இவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பிரவீனாவுக்கு 24 பவுன் நகை, பைக் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். 3 மாதம் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு பிரவீனாவுக்கு நடராஜன் வீட்டார் நெருக்கடி கொடுத்து வந்தனர்.
இதனால் நடராஜன் மனைவியை தன்னுடன் அழைத்து செல்லாமல் இருந்து வந்தார். மேலும் கணவர் வீட்டில் இல்லாத போது கணவரின் தம்பி சதீஷ் பிரவீனாவுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணவரிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லையாம். இந்நிலையில் பிரவீனாவை, வீட்டைவிட்டு வெளியேற்றியதுடன் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு கணவரின் குடும்பத்தினர் சென்று விட்டனர். ஆனாலும், 20 நாட்களாக கணவர் வீட்டின் முன் பிரவீனா காத்திருந்தார்.
ஊர் முக்கியஸ்தர்கள் பேசியும் நடராஜன் குடும்பத்தினர் கண்டுகொள்ளாததால் நேற்று பிரவீனா அப்பகுதி மக்களுடன் வந்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜிடம் புகார் மனு அளித்தார். பின்னர் நேற்று இரவு பொதுமக்கள் உதவியுடன் கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைத்து மாமனார் வீட்டில் பிரவீனா புகுந்தார். அங்கு இரவு முழுவதும் தங்கி இருந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.