சென்னை: இந்து மதத்திற்கு எதிராக ஆ.ராசா பேசியதாக திரித்து கூறி கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறது பாஜ என முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மனுஸ்மிருதியில், சாதிய முறையை நியாயப்படுத்தியும், இந்தியாவின் பெரும்பகுதி மக்களை இழிவுபடுத்தியும் உள்ள வாசகங்களை எடுத்துக் கூறியும், இவை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கங்களுக்கும், விதிகளுக்கும் எதிராக உள்ளதையும் ஆ.ராசா தன் உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பாஜ மதவெறி அமைப்புகள், இந்து மதத்திற்கு எதிராக பேசியதாக திரித்துக் கூறி தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு கருத்துச் சுதந்திரத்தின் மீது எப்பொழுதுமே நம்பிக்கை இருந்ததில்லை. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையை நாடுகின்றார்கள். இவர்களின் இத்தகைய நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கின்றேன்.