தர்மபுரி: தர்மபுரியில் முதல் மாடியில் இருந்து இரும்பு பீரோவை கீழே இறக்கும் போது மின்சார கம்பியில் உரசி 3 பேர் மரணமடைந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் வாடகைக்கு குடியிருந்த இலியாஸ், வீட்டு உரிமையாளர் பச்சையப்பன், வேன் ஓட்டுநர் கோபி ஆகியோர் தான் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்கள் ஆவர். முதல் மாடியில் வாடகைக்கு குடியிருந்த இலியாஸ் என்பவர், வீட்டு சாமான்களை இடமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். பீரோவை முதல் மாடியில் இருந்து கயிறு கட்டி கீழே இறக்கும் பணியில் நான்கு பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீட்டை ஒட்டியபடி செல்லும் மின் கம்பியில் இரும்பு பீரோ உரசியது.
இதில் வீட்டு உரிமையாளர் பச்சையப்பன், வாடகைக்கு குடியிருந்த இலியாஸ், வேன் ஓட்டுநர் கோபி மற்றும் உதவி செய்ய வந்த மற்றொருவர் என 4 பேரை மின்சாரம் தாக்கியது. இதில் 3 பேரும் நிகழ்விடத்திலேயே மரணமடைந்தனர். உதவி செய்ய வந்த மற்றொருவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து தர்மபுரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே படுகாயமடைந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பீரோவை கீழே இறக்கும் போது 3 பேர் மரணமடைந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.