புதுடெல்லி: பிரபல கப்பல் கட்டும் நிறுவனமான ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி மோசடி செய்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், இதன் நிறுவன தலைவர் ரிஷி அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த ஏபிஜி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம். இந்த நிறுவனம் கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்க்கும் தொழிலை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் 28 வங்கிகளில் இந்த நிறுவனம் சுமார் ரூ.22,842கோடி கடன் பெற்ற நிலையில் குறிப்பிட்ட நோக்கத்துக்காக இந்த நிதியை பயன்படுத்தவில்லை.
மேலும் கடனை செலுத்தாமல் மோசடியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது குறித்து கடந்த 2019ம் ஆண்டு சிபிஐயிடம் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் ஏபிஜி நிறுவனத் தலைவரான ரிஷி அகர்வாலை சிபிஐ நேற்று கைது செய்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அவருடைய கூட்டாளிகள் மீதும் சதி, ஏமாற்றுதல், பதவியை துஷ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.