தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவில் ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் சங்கரநாராயணன் தலைமையில் போலீசார் நேற்று மாலை திடீரென அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 27 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து 1500 ரொக்கம், 50 டோக்கன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவர்கள் எவ்வளவு நாளாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே நேரத்தில் 27 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல், வடசென்னை பகுதிகளில் பல்வேறு இடங்களில் சூதாட்ட கிளப் நடப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.