பெங்களூரு: கர்நாடகாவில் தலித் சிறுவன், சாமி சிலையை தொட்டதால் ரூ.60,000 அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், மாலூர் தாலுகாவில் உள்ள உலேரஹள்ளி என்ற கிராமத்தில் வசித்து வரும் ஷோபா-ரமேஷ் தம்பதியரின் 15 வயதான மகன் சேந்தன், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நான்கு நாட்களுக்கு முன்பு உலேரஹள்ளி கிராமத்தில் உள்ள பூதம்மா கோவில் ஊர் திருவிழா நடைபெற்ற போது, சேத்தன் சாமி சிலையை தொட்டு வணங்கி உள்ளார்.
இதை கண்ட கிராம மக்கள் தலித் சிறுவன் எப்படி கடவுள் சிலையை தொடுவது என சேத்தன் மீது தாக்குதல் நடத்தி அவரது பெற்றோர்களை வரவழைத்து அந்த குடும்பத்திற்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் அதை செலுத்த தவறினால் ஊரை விட்டு காலி செய்ய வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர். இந்த செய்தி ஊடகங்கள் வழியாக வெளியான நிலையில் தலித் சங்கங்கள் ஷோபா மற்றும் ரமேஷ் தம்பதியினரை சந்தித்து ஆலோசனை வழங்கி அபராதம் விதித்த கிராமத்தினர் எட்டு பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பதிலுக்கு சிறுவன் குடித்துவிட்டு நடனமாடியதால் அவனை கண்டித்தோம் அபராதம் விதிக்கவில்லை என கிராம தலைவர்கள் சார்பில் காவல் போலீஸ் நிலையத்தில் பதில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.