திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 22வது வார்டுக்கு உட்பட்ட பல்ஜி பாளையம் பகுதியில் சென்னை மாநகராட்சி தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரூ.37 கோடி செலவில் அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1 முதல் 8 மண்டலங்கள் வரை உள்ள வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பை கொண்டுவரப்பட்டு நவீன இயந்திரங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு அதிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கப்படும். இந்த இயற்கை எரிவாயு மையத்தை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த எரிவாயு மையத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர் ஆய்வு செய்தனர். எரிவாயு மைய செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் மேயர் கேட்டறிந்தார். கவுன்சிலர்கள் தீர்த்தி, காசிநாதன், நந்தினி, ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.