×

முதல் டி.20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி: மோசமான பவுலிங், பீல்டிங் தான் தோல்விக்கு காரணம்; இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

மொகாலி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் போட்டி நேற்றிரவு மொகாலியில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 208ரன் எடுத்தது. ஹர்திக் பாண்டியா நாட்அவுட்டாக 30 பந்தில் 7பவுண்டரி,5சிக்சருடன் 71, கே.எல்.ராகுல் 35பந்தில் 4பவுண்டரி,3 சிக்சருடன் 55, சூர்யகுமார் யாதவ் 46ரன் (25பந்து,2பவுண்டரி,4சிக்சர்) அடித்தனர். ஆஸ்திரேலியா பவுலிங்கில் நாதன் எல்லிஸ் 3, ஹேசில்வுல் 2விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம்இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன்  ஆரோன் பிஞ்ச் 22, ஸ்டீவன் ஸ்மித் 35, மேக்ஸ்வெல் 1, ஜோஷ் இங்கிலிஸ் 17 ரன்னில் வெளியேற மற்றொரு தொடக்க வீரர் கேமரூன் கிரீன் 30 பந்தில் 8பவுண்டரி,4சிக்சருடன் 61ரன்  அடித்தார். டிம் டேவிட் 18ரன்னில் அவுட் ஆனார். 19.2ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 211ரன் எடுத்த ஆஸ்திரேலியா 4விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேத்யூ வேட் நாட்அவுட்டாக 45(21பந்து, 6பவுண்டரி,2சிக்சர்), கம்மின்ஸ் 4 ரன்னில் களத்தில் இருந்தனர். இந்திய பவுலிங்கில் அக்சர் பட்டேல் 3, உமேஷ் யாதவ் 2விக்கெட்எடுத்தனர். கேமரூன் கிரீன்ஆட்டநாயகன் விருதுபெற்றார். இந்த வெற்றி மூலம் 1-0 எனஆஸி. முன்னிலை வகிக்க 2வது போட்டி நாளை மறுநாள் நாக்பூரில் நடக்கிறது.

வெற்றிக்கு பின் ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் அளித்த பேட்டி: இது ஒரு நல்ல போட்டி. பின்பாதியில் பனி எங்களுக்கு உதவியது. எங்களிடமிருந்து சில நல்ல பார்ட்னர்ஷிப்கள் அமைந்தன.  எங்கள்அனைவரின் நோக்கமும் அதிரடியாக ஆடுவது தான். மேலும் ஆட்டத்தின் வேகத்தை மாற்ற முயற்சித்தது மிகவும் நன்றாக இருந்தது. அதைத்தான் தற்போது நாங்கள் பின்பற்றுகிறோம். உலகக் கோப்பைக்கு செல்லும் முன் அனைத்து செயல்முறைகளையும் நாங்கள் இன்னும் ஊக்குவிக்க முயற்சிக்கிறோம், என்றார்.

தோல்விக்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது: நாங்கள் சிறப்பாக பந்துவீசவில்லை. 200+ ரன்களை என்பது சிறந்த ஸ்கோர்தான். பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படவில்லை. பேட்டர்கள் மட்டுமே நல்லமுறையில் விளையாடினார்கள். பந்துவீச்சாளர்கள் இதில் பாதிகூட தீவிரமாக இருக்கவில்லை. இந்த பிட்ச் அதிக ரன்களை அடிக்க ஏற்றது.. இதனால், அடிக்கடி விக்கெட்களை எடுத்தால் மட்டுமே போட்டியில் இருக்க முடியும். அதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதனை நாங்கள் கோட்டைவிட்டோம். கடைசி 4 ஓவர்களில் 60 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, பவுலர்தான் தங்களால் முடிந்த சிறப்பினை வெளிப்படுத்தி கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அந்த நேரத்தில் விக்கெட்களை எடுக்காததுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. தினமும் 200 ரன்களை அடிக்க முடியாது. கடுமையாக போராடி பேட்டர்கள் இந்த ரன்களை அடித்தார்கள். ஹர்திக் பாண்டியாவுக்கு எனது பாராட்டுக்கள், என்ன தவறு நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு சிறந்த விளையாட்டாக இருந்தது. அடுத்த போட்டிக்கு முன் பந்துவீச்சை மேம்படுத்தவேண்டும், என்றார்.

பிஞ்சுடன் பேட் செய்வது மகிழ்ச்சி
ஆட்ட நாயகன் கேமரூன் கிரீன் கூறுகையில், பிஞ்சுடன் பேட்டிங் செய்வது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் ஒரு அனுபவமிக்க வீரர்.  ஹர்திக் அழகாக பேட்டிங் செய்தார். லெத்ஓவர்களில் இவ்வாறு பேட்டிங் செய்வதில் அவர் உலகின் சிறந்தவராக இருக்கிறார். அவர்கள் பேட் செய்வதைப் பார்ப்பது ஒருவிதத்தில் நன்றாக இருந்தது, துரத்தும்போது எப்படிச் செல்வது என்பது பற்றிய யோசனையை எங்களுக்குத் தந்தது. தொடர்ந்து தொடக்க வீரராக ஆடுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அதைப் பற்றி சிந்திக்க பயிற்சியாளர்களிடம் விட்டுவிடுகிறேன், என்றார்.

Tags : Australia ,T20I ,Indian Team ,Rohit Sharma , First T20 match, Australia win, poor bowling, fielding is the reason for defeat, Indian team captain Rohit Sharma
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...