உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சிக்குட்பட்ட நல்லிவீரன்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமமக்கள் பயன்படுத்தி வரும் மயானம் உசிலம்பட்டி கண்மாய் அருகில் அமைந்துள்ளது. இந்த மயானத்திற்கு மதுரை- போடி ரயில் பாதையை கடந்து செல்லும் தார்ச்சாலை வழியாகவே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சென்று வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மதுரை- போடி ரயில் பாதையை , அகல இரயில்பாதையாக மாற்றம் செய்யும் போது இந்த வழிப்பாதையில் பாலம் அமைத்து தர தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கைகளும் இன்றி பாதையை அடைத்து அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை தற்போது இயங்கி வருகிறது. இதனால் அவ்வப்போது இறப்பவர்களின் உடல்களை இந்த ரயில் பாதை வழியாகவே ஆபத்துடன் கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம், தென்னக ரயில்வே நிர்வாகமும் கிராமமக்கள் மயானத்திற்கு சென்று வர சுரங்கப்பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.