கடலூர் : கடலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனை மாவட்ட தலைநகர் என்ற அந்தஸ்தில் தலைமை மருத்துவமனையாகவும் அமைந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் காய்ச்சல் அதிகரித்து நோயாளிகளின் பெருக்கமும் உயர்ந்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மருத்துவ முகாம்கள் அமைத்து ஆங்காங்கே உரிய சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரம் பேர் வரை சிகிச்சைக்காக மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளை நாடிவரும் நிலையில் தற்போது 2500 வரை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே மருத்துவமனையின் வளாகத்தில் ஆங்காங்கே கழிவு நீர் தேக்கம் மற்றும் பெருக்கெடுத்து ஓடும் நிலைப்பாடு நோயாளிகளையும், அவருடன் வரும் பொது மக்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. சுகாதாரத்தின் தன்மையில் தூய்மையின் முதலிடமாக இருக்க வேண்டிய கடலூர் தலைமை அரசு மருத்துவமனை வளாகமே இப்படி சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் நிலைப்பாடு மேலும் நோய் பரவும் நிலைபாட்டை உருவாக்கியுள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட சுகாதார துறை கிடப்பில் போடப்பட்ட நிலைப்பாடாக நடவடிக்கையை மேற்கொள்ளாமல் உள்ளது எனவும் மருத்துவமனை நாடி வருபவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கழிவுநீர் தேக்கத்தால் கொசுக்கள் பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய் பரவும் நிலைப்பாடு உருவாகியுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தற்போது உள்ள சூழலில் மருத்துவமனை வளாகத்தை தூய்மை பணியை மேற்கொண்டு நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையும் நோய் பரவலை தடுக்கும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என எதிர்நோக்கியுள்ளனர்.