காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பேரிடர் பயிற்சி பெற்ற 215 தன்னார்வலர்களுக்கு டிஆர்ஓ சான்றிதழை மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்திரைய்யா வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டமானது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து மாநில பேரிடர் மேலாண்மையால் நடத்தப்படும் தன்னார்வலர்களுக்கான பேரிடர் கால நண்பன் என்ற பயிற்சி திட்டம். இப்பயிற்சி திட்டத்தின் நோக்கம் பேரிடர்களை புரிந்து கொள்ளுதல், தயார் நிலைப்படுத்துதல், அடிப்படை தேவை மற்றும் சமுதாய மக்களை காப்பாற்றும் மீட்பு பணிகள் ஆகிய திறன்களை மேம்படுத்தும் திட்டம். பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்னர் தங்களது இடங்களில் பாதுக்காப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை அறிந்துக்கொள்ளுதல் ஆகும்.
ஆகவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 400 தன்னார்வலர்களில், 215 தன்னார்வளர்களுக்கு சிறந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 200 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இனிவரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் தங்களது வட்டங்களில் ஒரு குழுவாக செயல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இணைந்து பேரிடர் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டு மாவட்டத்தில் உயிர் சேதம், பொருள் சேதம் இல்லாதவாறு ஏற்படுத்திட உதவிட வேண்டும் என பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெற்ற 215 தன்னார்வலர்களுக்கு பேரிடர் கால நண்பன் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்திரைய்யா தலைமை தாங்கி பயிற்சி பெற்ற 215 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேரிடர் காலங்களில் பொதுமக்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விளக்கிப் பேசினார். இதில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், ஜிவிகே நிறுவன தலைமை நிர்வாகி சரவணன், தாசில்தார்கள் பிரகாஷ், லோகநாதன் பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் தாசில்தார் தாண்டவ மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.