வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 14 வயதுடைய 9ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள், நேற்று காலை பள்ளிக்கு வந்தனர். இருவரும் மதியம் 12 மணியளவில் சோர்வாக இருந்தனர். சந்தேகமடைந்த ஆசிரியர் விசாரித்த போது, குடும்ப பிரச்னையால் சாணி பவுடர் (மயில்துத்தம்) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். உடனடியாக இருவரையும் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த வாழப்பாடி டிஎஸ்பி சுவேதா மற்றும் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் விஷம் குடித்த மாணவி ஒருவரின் பெற்றோர், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால், அத்தை வீட்டில் தங்கி படித்து வருவதும், மற்றொரு மாணவியின் சகோதரர் அவரை அடித்து வந்ததும், தோழிகளான இருவரும் மனஉளைச்சலால் தற்கொலை செய்ய முடிவு எடுத்து, நேற்று காலை சாணி பவுடரை குடித்து விட்டு பள்ளிக்கு வந்ததும் தெரியவந்தது. இதனிடையே, மாணவிகள் இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.