சென்னை: அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்த பணிகள் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆகியோர் சார்பில் புகார் செய்யப்பட்டது. புகார்களின் அடிப்படையில் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், தன் தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி வேலுமணி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேலுமணி தரப்பில் வழக்கறிஞர் அய்யப்பராஜ் ஆஜராகி, மூத்த வக்கீல் எஸ்.வி.ராஜூ இந்த வழக்கில் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் வாதிட இப்போது தயாராக உள்ளோம் என்றார். அப்போது, எஸ்.பி.வேலுமணி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜூ ஆஜராகி, ஏற்கனவே இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் முறையிட்டார். அறப்போர் இயக்கம் சார்பில் வக்கீல் சுரேஷ் ஆஜராகி வாதிட்டார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றுக்கிறோம்.
அதுவரை, எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக் கூடாது என்ற இடைக்கால தடை நீட்டிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.