×

கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் பற்றி பேசினோம்: அமித்ஷா சந்திப்பு குறித்து எடப்பாடி புது விளக்கம்

சென்னை: கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசினோம் என்று எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.  டெல்லி நார்த் பிளாக் பகுதியில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சக அலுவலகத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று காலை 11.10 மணி அளவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நீடித்தது. பின்னர் வெளியில் வந்த எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:

 ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கோதாவரி -காவிரி இணைப்பு திட்டம் பற்றி பேசினோம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும், குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான் முதல்வராக இருந்த கால கட்டத்திலேயே பல்வேறு முறை பிரதமரை சந்தித்த போது நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதை அவர் பரிசீலிப்பதாக சொன்னார். தற்போது அது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையில் இருப்பதாக அறிகிறேன். அதை வேகப்படுத்தி, துரிதப்படுத்தி அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தோம்.

அடுத்ததாக,  ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அறிவித்த திட்டமான, ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற ஒரு திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம். காவிரி நதியில் கலக்கின்ற மாசுபட்ட நீரை சுத்தம் செய்து காவிரியில் விடுவதற்காக முன் வைத்த திட்டம் அது. இந்த திட்டத்தை பிரதமர் இரு அவையின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையில் இடம் பெற்று அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தை வேகமாக துரிதமாக நிறைவேற்ற கோரிக்கை வைத்துள்ளோம். தமிழகத்தில் தற்போது அடியோடு சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தமிழகம் முழுவதும் தடையின்றி போதை பொருள் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியக்கூடிய சூழ்நிலையை எடுத்து சொன்னோம்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன் கொடுமைகள் தொடர்ந்து நிலவி வருகிறது. இன்று ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்தித்து புகாராக அளித்துள்ளேன். பிரதமரை சந்திக்க நான் நேரம் கேட்கவில்லை., தற்போது அந்த திட்டமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 பின்னர், அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில், ‘‘அதிமுக உள்கட்சி விவகாரம் என்பது முழுக்க முழுக்க நீதிமன்றத்தின் பார்வையில் உள்ளது. அதனால் அது குறித்து எந்த கருத்தையும் வெளியிட முடியாது. அப்படி தெரிவிக்கும்பட்சத்தில் அது சர்ச்சையாகிவிடும் என்றார்.

 இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறோரே என்ற நிருபர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:
ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் செல்வது குறித்து அவரிடம் தான் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அதற்கு அவர் தான் விளக்கம் அளிக்க வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை வேலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் என சுமார் 20 மாவட்டங்களில் நாங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டோம். இதை தொடர்ந்து மீதமுள்ள மாவட்டங்களிலும் அதிமுக தரப்பில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும்’’ என்றார். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்துக்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைத்தான் சந்தித்து மனு கொடுத்திருக்க வேண்டும். முழு பூசணிக்காயை மறைப்பதுபோல இந்த திட்டத்துக்கு அமித்ஷாவை சந்தித்து மனு அளித்துள்ளார் என்று கூறியுள்ளார் என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.

Tags : Edapadi ,Amitsha , Godavari- Cauvery Link Project, Amit Shah Junction, Edappadi New Description
× RELATED ஈவு இரக்கம் இல்லமல் ஒரு ஆட்சி எப்படி...