வேளச்சேரி: வேளச்சேரியில் தனியார் பள்ளி இடிந்து விழுந்து 2 மாணவர் படுகாயம் அடைந்தனர். வேளச்சேரி, புவனேஷ்வரி நகர் பகுதியில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 9ம் தேதி, ஒரு வகுப்பறையின் மேற்கூரை சிமென்ட் பூச்சு இடிந்து விழுந்தது. இதில், ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவி சாஹனா (6), மாணவன் தர்ஷன் (5) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து, இருவரும் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், சஹானாவின் தந்தை சந்திரசேகர் இதுகுறித்து நேற்று வேளச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் பள்ளி நிர்வாகம் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.