அண்ணாநகர்: ரவுடியுடன் இணைத்து பேசியதால் விரக்தியடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அண்ணாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அண்ணாநகர், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் விஜயகுமார். தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி மகாலட்சுமி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மகாலட்சுமி வீட்டின் சமையலறையில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த விஜயகுமார் மற்றும் அக்கம்பக்கத்தினர், அவரது உடலில் போர்வையை போட்டு தீயை அணைத்தனர்.
பின்னர், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அண்ணாநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மகாலட்சுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அம்முவுக்கும் (36). இவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மகாலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிக்கும் தகாத உறவு இருப்பதாக அம்மு கூறி, ஆபாசமாக பேசியதும், இதனால், விரக்தி அடைந்த மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று மதியம் அம்முவை கைது செய்து விசாரிக்கின்றனர்.