சென்னை: தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை இன்று விசாரணைக்காக பட்டியலிடப்படும் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அவற்றில் நடவடிக்கை எடுகவில்லை என உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன.
பின்னர் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சென்னை மற்றும் கோவை பிரிவுகளால் தலா ஒரு வழக்கு என 2021, 2022ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டது. அந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் இந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள ஒற்றை நீதிபதி அமர்வு தான் விசாரிக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை இரு நீதிபதிகள் அமர்வே விசாரிக்கலாம் என்றும், ஒன்றிய அரசு வழங்கிய அனுமதி திரும்பப் பெறப்படாததால் வழக்கறிஞர் ராஜு ஆஜராகலாம் என்றும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்று தள்ளிவைத்து இருந்தனர். இந்நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதிகள் இன்று வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.