செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகரில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளின் 4-வது மாநாட்டில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
மாற்றுத்திறனாளிகளின் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்; மாற்றுத்திறனாளிகள் என்ற சுயமரியாதை பெயரைச் சூட்டியவர் கலைஞர் தான் எனவும் ஒரு திறன் குறைந்தாலும் இன்னொரு திறன் மூலம் ஆற்றல் மிகுந்தவர்கள் நீங்கள் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
உலக வங்கி உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் உதவித்திட்டம் செய்லபடுத்தப்பட்டுள்ளது எனவும் செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பி.காம்., பி.சி.ஏ. படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தற்போது வழங்கப்பட்டு வரும் உதவிகள், பரிசுத்தொகைகள் அனைத்தும் ரொக்க பணமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
கொரோனா காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, ஆவின் பாலகம் அமைக்க வாடகை, முன்பணம் செலுத்துவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, கிராமங்களில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பேசினார்.
சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 4 முதல்வர்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். வெறும் 4 முதல்வர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே” என மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
மேலும் திமுக ஆட்சியின் மீது அவதூறு கருத்துக்களை பரப்ப நினைக்கிறார்கள் எனவும் சொல் புத்தியும் இல்லாமல், சுயபுத்தியும் இல்லாமல் செயல்பட்ட அதிமுக ஆட்சி போல் திமுக ஆட்சி இல்லை எனவும் இனி தமிழ்நாட்டை ஆளப்போவது திமுக ஆட்சிதான் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களின் நம்பிக்கையை ஆட்சியர்கள் பெறுவதுதான் சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துயரை கலைஞர் முதல்வராக இருந்தபோது கண்ணும், கருத்துமாக கவனித்தார் என்று அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்குவதற்கான வயது உச்சவரம்பு 60-ஆக அதிகரித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் 235 இல்லங்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் அதிகரித்துள்ளது. உணவூட்டு மானியம் ரூ. 900-ல் இருந்து ரூ. 1200 -ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.