×

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணி இறுதி கட்டத்தை எட்டியது: 9 ஆண்டுகளுக்கு பின் முடிகிறது

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் 9 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பாதாள சாக்கடை பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது மக்கள் தொகை அதிகரிப்பையொட்டி ரூ.76.4 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை பணி கடந்த மார்ச் 2013ம் ஆண்டு தொடங்கியது. மொத்தம் 52 வார்டுகள் உள்ள நாகர்கோவில் நகராட்சியில் 18 வார்டுகள் முழுவதும், 17 வார்டுகளில் பகுதியாகவும் பாதாளசாக்கடை பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தி வருகிறது. மொத்தம் 118.86 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. சுமார் 9 ஆண்டுகளாக இந்த பணிகள் முடிவடையாமல் இழுபறி உள்ளன. கடந்த வருடம் இறுதியில் 102.76 கிலோ மீட்டருக்கு முடிக்கப்பட்டது. நீதிமன்ற வழக்கு, நெடுஞ்சாலைதுறை அனுமதி என சில இடர்பாடுகளால் பாதாளசாக்கடை பணி முடிவடைய காலதாமதம் ஏற்பட்டது.

பாதாளசாக்கடை பணி தொடங்கிய 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டிருந்தால் ரூ.52 கோடியை ஒன்றிய அரசு வழங்கி இருக்கும். ஆனால் காலம் கடந்ததால் ஒன்றிய அரசு வழங்கவேண்டிய ரூ.52 கோடியை மாநில அரசு வழங்கியுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியாக மாற்றப்பட்டு முதல் மேயராக மகேஷ் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று சுமார் 6 மாதங்கள் ஆகின்றன. பாதாள சாக்கடை மற்றும் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கை  மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு ஜூன் மாதமே பணிகள் முடிவடைந்து விடும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் இன்னும் பாதாள சாக்கடை பணி முடிவடையாத நிலை உள்ளது.

பாதாளசாக்கடை வழியாக வரும் கழிவுகள் வடிவீஸ்வரம் பறக்கிங்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வலம்புரிவிளை உரக்கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு கழிவுகள் உரமாகவும், நீர் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தினமும் 175 லட்சம் லிட்டர் தண்ணீர் இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் பிரிக்கும் வகையில் 2 பிரமாண்டமான பிளாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுத்திகரிப்பு நிலையம் ரூ.17 கோடியிலும், பறக்கின்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீரேற்று நிலையம் ரூ.6 கோடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணி செய்ய வேண்டி இருந்தது. இந்த ணி முடிவடைந்துள்ளது.

இதுபோல் கழிவுநீரோடைகள் செல்லும் குறுகலான தெருக்களிலும் பணி செய்ய வேண்டி இருந்தது. இந்த பணிகள் கடந்த மாதம் முடிவடைந்துள்ளன. பிரதான சாலைகளில் குழாய்கள் பதிப்பு பணிகள் முடிவடைந்து விட்டன. முக்கிய சந்திப்புகளில் இணைப்பு பணிகள் செய்ய வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் வரை பணிகள் செய்யும் காண்ட்ராக்டருக்கு ரூ.10 கோடி பாக்கி இருந்தது. இதனால் அவர் பணி செய்ய முடியாது சென்று விட்டார். இதனால் கடந்த 3 மாதங்களாக பணிகள் நடைபெறாமல் இருந்தன. பின்னர் காண்ட்ராக்டரை சமாதானம் செய்து அழைத்து வந்து தற்போது பாதாள சாக்கடை பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன. தற்போது பணிகள் வேகமாக நடக்கின்றன. சுமார் 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
வலம்புரிவிளையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் பிரதான குழாய்கள் இணைப்பு மட்டும் பாக்கி உள்ளது. இந்த பணிகளும் தற்போது வேகமாக நடந்து வருவதால், பணிகள் விரைவில் முடிவடைந்து விடும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ரூ. 76 கோடியில் தொடங்கிய திட்டம் ரூ.110 கோடியில் நிற்கிறது: கடந்த 2013ம் ஆண்டு ரூ.76.04 கோடியில் பாதாளசாக்கடை பணி தொடங்கியது. இந்த பணி 2 வருடத்தில் முடித்திருக்கவேண்டும்.  வழக்கு உள்ளிட்ட காரணத்தால் தாமதம் ஏற்பட்டதால் திட்டமதிப்பீடு உயர்ந்துள்ளது.

2 ஆண்டில் முடிக்கவேண்டிய திட்டப்பணி 7 வருடம் கடந்தும் முடிக்கப்படவில்லை. இதனால் திட்டமதிப்பீடு உயர்ந்து தற்போது ரூ.110.51 கோடியில் இந்த பணியை முடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வலம்புரிவிளையில் அமைந்துள்ள சுத்திரிப்பு நிலையத்தை சுற்றி 2 மீட்டர் உயரத்திற்கு காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது. 2 மீட்டர் உயரத்திற்கு கட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரை 5 மீட்டர் உயரத்திற்கு கட்டவேண்டும் என பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது. இதனால் 5 மீட்டர் உயரத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்படவுள்ளது.

Tags : Nagercoil , Underground sewer work in Nagercoil reaches final stage: complete after 9 years
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை