சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த பைனலில், உலக தரவரிசையில் 67வது இடத்தில் உள்ள போலந்தின் 30 வயதான மேக்டா லினெட், 130ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் 17 வயது இளம்புயல் லின்டா புருவிர்தோவா மோதினர். 2 மணி நேரம் 40 நிமிடம் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில், லின்டா புருவிர்தோவா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் லினெட்டை தோற்கடித்து மகுடம் சூடினார். அவருக்கு இது தான் முதல் சர்வதேச பட்டமாகும்.
கோப்பையை வென்ற அவருக்கு ரூ.26 லட்சம் மற்றும் 2வது இடம் பிடித்த லினெட்டுக்கு ரூ.16 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. வெற்றிக்கு பின் லின்டா கூறுகையில், இது தான் எனது முதல் சர்வதேச பட்டமாகும். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணமாகும். இதே போல் சென்னையையும், ரசிகர்கள் அளித்த ஆதரவையும் மறக்க மாட்டேன். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இங்கு வருவேன். நான் இங்கே ஒரு நல்ல முடிவைச் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும், ஆனால் அனைவரும் எதிர்பார்த்ததை விட இது மிகவும் சிறப்பாக இருந்தது. பட்டம் வென்றது எனக்கு ஒரு சிறந்த தொடக்கமாக உணர்கிறேன், என்றார்.