×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அனுமதி இன்றி கூட்டம்; பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் உட்பட 75 பேர் மீது வழக்கு பதிவு: நேரில் ஆஜராகி விளக்கம் அறிக்க போலீஸ் சம்மன்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் முன் அனுமதி இன்றி கூட்டம் நடத்தியது தொடர்பாக சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் உட்பட 75 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க அனைவருக்கும் சம்மன் அனுப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 31ம் தேதி நவராத்திரி மண்டபத்தில் எந்த வித முன் அனுமதியின்றி கூட்டம் நடந்தது. பொதுவாக கோயில் வளாகத்தில் கோவில் விபரங்களை தவிர மற்ற விஷயங்கள் தொடர்பாக எந்த வித கூட்டமும் நடத்த கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் இந்த விதிகளை மீறி சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், உயர் நீதிமன்ற உழக்கறிஞர் வெங்கடேஷ், இந்து தமிழர் கட்சி தலைவர் ரவி ஆகியோர் தலைமையில் 75 பேர் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.  அந்த கூட்டத்தில், கோயில் நிர்வாகத்தில் தவறு நடந்தால் அதை உடனே தட்டிக்கேட்க வேண்டும் என்றும், கோயில் நிர்வாகத்தை பக்தர்களிடம் கொடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டம் கோயில் மைய மண்டபத்தில் முன் அனுமதி இன்றி நடந்ததால் சம்பவம் குறித்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ஊழியர் ரவிக்குமார் என்பவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் கோயில் வளாகத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து கோயில் வளாகத்தை கூட்டம் நடத்த பயன்படுத்தியதாக பாஜக கவுன்சிர் உமா ஆனந்த் உட்பட கூட்டத்தில் கலந்து கொண்ட 75 பேர் மீது ஐபிசி 143(சட்டவிரோதமாக கும்பலில் உறுப்பினராக இருத்தல்), 150(சட்டவிரோதமாக ஆட்களை சேர்த்தல்), மாநகர காவல் சட்டம் பிரிவு41(6),(எ)ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தடையை மீறி கோயில் வளாகத்தில் கூட்டம் நடத்திய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் உட்பட 75 பேர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மயிலாப்பூர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.



Tags : Kapaleeswarar temple ,Mylapore ,BJP ,Uma Anand , Unauthorized gathering at Kapaleeswarar temple in Mylapore; Case registered against 75 people including BJP councilor Uma Anand: Police summons to appear in person and explain
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது