×

மியான்மாரில் வதைபடும் தமிழகத் தொழிலாளர்களை மீட்க வேண்டும்: இந்தியக் கம்யூ. கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேளைக்கு சென்றவர்கள் மியான்மருக்கு அனுப்பப்பட்டு அங்கு சொல்லொணா கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். மிக கொடுமையாக தாக்கப்படும் தங்களை உடனே மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மியான்மரில் சிக்கியிருக்கும் தமிழர்கள் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தியில், மியான்மாருக்கு கடத்தப்பட்ட தமிழகத் தொழிலாளர்களை மீட்க வேண்டும், மியான்மாரில் வதைபடும் தமிழகத் தொழிலாளர்களை மீட்க வேண்டும்.

நாட்டில் நிலவும் வரலாறு காணாத வேலையின்மை பல விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குடும்ப உறுப்பினர்களின் உயிர் வாழ்வுக்கும், குழந்தைகளின் எதிர்கால நலனுக்கும் வேலை தேடி அலைந்து திரிவோர் அவல நிலை எழுத முடியாத துயரமாகும். இந்தப் பரிதாபகரமான நிலையைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் சட்டவிரோத செயலில் சில கும்பல்கள் “வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகமைகளாக” செயல்பட்டு வருகின்றன. இதில் பணம் கொடுத்து ஏமாந்து விட்ட, ஆயிரக்கணக்கானோர் சட்டப்படி புகார் கொடுத்துள்ளனர். ஆனால் குற்றச் செயல்கள் குறைந்தபாடில்லை. அண்மையில் தாய்லாந்தில் வேலை அமர்த்துவதாக கூறி, அழைத்துச் சென்றவர்கள், மியான்மார் நாட்டின் மியாவாடி நகருக்கு கொண்டு சென்று, கொத்தடிமைப் பணிக்கு நிர்பந்தித்து, சித்தரவதை செய்வதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி மியாவாடியில் சிக்கியுள்ளவர்கள், தாய்லாந்தில் தவிக்கவிடப்பட்டவர்கள் குடும்பங்களில் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என உறுதியளித்த பாஜக ஒன்றிய அரசு, நடைமுறையில் ஏமாற்றி விட்டதால், தொழிலாளர்கள் அயல்நாடுகளில் அவதிப்படும் கொடுமை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மியான்மாரில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்டு, அவரவர் வீடுகளில் ஒப்படைத்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க ஒன்றிய அரசும், அயலுறவுத்துறையும் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, நாட்டின் பிரதமரையும், அயலுறவுத்துறை அமைச்சரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Myanmar ,Indian Comm ,Tamil Nadu State Executive Committee ,Union Government , Myanmar, Tamil Nadu Labor, Indian Commun. Party, Union Govt
× RELATED ஸ்டார் ஃப்ரூட்டின் நன்மைகள்!