×

தமிழக-கேரள எல்லையோரப் பகுதி மலைக்கிராமங்களில் வனவிலங்குகள் அட்டகாசம்-வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

மூணாறு : தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளும் மக்கள் வசிக்கும் பகுதிக்குள்ளும் குறிப்பாக விவசாய நிலங்களை நோக்கியும் வர துவங்கி விட்டன.

தேனி மாட்டத்தில், தேவாரம், பண்ணைபுரம், போடி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடமலைக்குண்டு ஒன்றியம், வருசநாடு, தேவாரம், பண்ணைபுரம், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது காட்டு யானை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. அவை விவசாய நிலங்களில் புகுந்து காய்கறிகளையும் அங்கு பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் காட்டு மாடு, யானை அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை தாக்கி விடுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.
இதுபோன்ற சூழலில் சில விவசாயிகள் மலை விவசாயம் செய்தாலும் அதனை கடைசி வரை விலங்குகளிடமிருந்து காப்பது சவாலாகவே உள்ளது.

எனவே வனத்துறையினர் தலையிட்டு வனவிலங்குகளை விவசாய நிலங்களுக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், தாலுகாவில் பெரும்பாலான கிராமங்களில் விவசாய நிலங்களில் தொல்லை தரும் யானைகளை அடர்ந்த வனங்களில் கொண்டு சென்று விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மூணாறில் காட்டு யானைகள் அதிகம்

ேகரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால், பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில் காட்டுயானையின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. மூணாறு அருகே பூப்பாறையை அடுத்த பெரியகானல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிகிறது. இந்த யானை, விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், அவ்வப்போது மூணாறு ரோட்டிலும் சுற்றித்திரிகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் மூணாறிலிருந்து ராஜபாளையம் நோக்கி சென்று தமிழக அரசு பஸ்சை, பூப்பாறையை அடுத்த பெரியகானல் அருகே ரோட்டோரம் நின்றிந்த யானை மறித்து, தும்பிக்கையால் பஸ்சை தாக்கியது. இதில், பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. பயணிகள் பயந்து கூச்சலிட்டதை தொடர்ந்து யானை வனத்தினுள் சென்றது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதேபோல், பூப்பாறையை அடுத்த சாந்தன்பாறை கிராம பஞ்சாயத்தில் ஆனையிறங்கல் பகுதியில் உள்ள ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையத்தையும் காட்டுயானை அடித்து நொறுக்கியது. மூணாறில் கண்ணன் தேவன் கம்பெனிக்கு சொந்தமான எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில மாதங்களில் 5 முறை இங்குள்ள ரேஷன் கடையை யானை அடித்து நொறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை பகுதிகளில் நெல்லி, மா, சப்போட்டா, தென்னை, வாழை விவசாயம் நடக்கிறது.

இப்பகுதியில் அவ்வப்போது, காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பண்ணைப்புரம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இதுமட்டுமின்றி, தண்ணீருக்கு பயன்படுத்தப்படும் பைப், மோட்டார் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக சேதப்படுத்தி செல்கின்றது.
அதுபோல், ேபுலி, சிறுத்தைகள் நடமாட்டமும் அதிகம்

கேரள மாநிலம் பழைய மூணாறில் தேயிலை தோட்ட பகுதியில் ஷீலா ஷாஜி உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அப்பகுதிக்கு வந்த புலியை கண்டதும், அனைவரும் அலறியடித்து ஓடினர். அவர்களை விரட்டிய புலியிடம் ஷீலா சிக்கி கொண்டார். புலி ஷீலாவின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்க முயன்றபோது, அவரின் அலறல் சத்தம் கேட்டு புலி மீண்டும் காட்டுக்குள் ஓடியது.புலியின் தாக்குதலில் காயமடைந்த மயங்கி விழுந்த ஷீலாவை, சக ஊழியர்கள் உடனடியாக மூணாறில் உள்ள டாடா ஹை ரேஞ்சு மருத்துவமனையில் அனுமதித்தனர். பெண் தொழிலாளியை புலி தாக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல், கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயி ஒருவரை சிறுத்தை தாக்க முயன்றபோது, அவர் தற்காப்புக்காக கத்தியால் சிறுத்தையை ெகான்ற சம்பவமும் நடந்தது.

உணவு தேடி வரும் கரடிகள்

கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டி, கன்னிமார்ஊத்து ஓடை பகுதி, வருசநாடு ஊராட்சிக்குட்பட்ட மொட்டப்பாறை சாலைகளில் கரடிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர், இதேபோல் தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட சீலமுத்தையாபுரம், மேல்வாலிப்பாறை, முத்துராஜபுரம், முத்துநகர், மற்றும் மேகமலை ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர், குழிக்காடு, நொச்சிஓடை, அரசரடி, வெள்ளிமலை, மஞ்சனூத்து, பொம்மராஜபுரம், போன்ற மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், இப்பகுதிகளில் விட்டில், ஈசல், பூச்சிகள் அதிகரித்துள்ளன.

இவற்றை உணவாக தின்பதற்காக கரடிகள் அதிகம் வருகின்றன. எனவே, வனத்துறையினர் பொதுவெளியில் சுற்றித்திரயும் கரடிகளை வனப்பகுதிக்குள் விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், யானைகளின் நடமாட்டம் ஒவ்வொரு வருடமும், ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை இருக்கும். எனவே, இப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுபோல், பகல்நேரத்திலேயே சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. குறிப்பாக, ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். புலி, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளிடம் இருந்து தப்பித்து செல்வதே பெரும்பாடாக உள்ளது.மேலும் மாலை 6 மணிக்கு மேல் மலைக்கிராமத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்வதில்லை. இதன் காரணமாக வீடுகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, கடலை எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட சிரமமாக உள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சிறுத்தை, கரடிகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும், என்றனர்.

வனவிலங்கு தாக்குதலுக்கு எதிராக கையெழுத்து சேகரிப்பு பிரசாரம்

மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக புலி, காட்டு யானை போன்ற வனவிலங்குகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டு யானை உள்ளிட் வனவிலங்குகள் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்நிலையில் மூணாறு பகுதியில் உள்ள சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு எதிராக கையெழுத்து சேகரிப்பு பிரசாரம் நடத்தப்பட்டது.

வன விலங்குகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் படங்களைக் கொண்ட ஃப்ளக்ஸ் போர்டில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், ஆசிரியர்களும் கையெழுத்திட்டனர். தொகுதி பஞ்சாயத்து உறுப்பினர் போனிபோஸ் முதல் கையெழுத்தை பதிவு செய்து பிரசாரத்தை துவக்கி வைத்தார். மூணாறு சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 40 பள்ளிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,Kerala ,Forest Department , Munnar: The problem of wild animals is increasing day by day in the hilly villages in Tamil Nadu-Kerala border areas.
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...