குன்றத்தூர்: செம்பரம்பாக்கம் ஏரியில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து இருவர் பலியாகினர். குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (20). இவர் அதே பகுதியில் கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் ரிச்சர்ட்ஸ் (16). பிளஸ் 2 மாணவர். இருவரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று வந்தனர். ஏரியை சுற்றிப் பார்த்து விட்டு, ஏரிக் கரையின் மீது உள்ள சுவரில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவரும் திடீரென நிலை தடுமாறி ஏரியின் உள்ளே தவறி விழுந்தனர்.
நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்த இருவரும் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து பூந்தமல்லி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடியதில், இருவரின் சடலங்களும் கிடைத்தன. குன்றத்தூர் போலீசாரர் இருவர் உடலையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.