தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு காவலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தஞ்சாவூர் பள்ளியக்கிரஹாரத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பிரேம்குமார் (30). இவர் பிள்ளையார்பட்டி நுகர்வோர் வாணிப கழக திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் தற்காலிக காவலராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் 2 மணியளவில் அம்மன்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்றார்.
அப்போது அங்கு வந்த 2 பேர் திடீரென அரிவாளால் பிரேமை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுபற்றி தகவலறிந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி பள்ளியக்கிரஹாரம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் வந்து மறியலில்அ வர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் சமாதானம் அடையாத அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு கோடியம்மன்கோயில் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து டவுன் டிஎஸ்பி ராஜா வந்து உறுதியளித்தபின் அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளிகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.