×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோட்டையில் அரசு ஊழியர்கள் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் நேற்று சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் அமைச்சர்கள், அனைத்து துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். சென்னை தலைமை செயலக வளாகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நேற்று காலை 11 மணிக்கு அனைவரும் ஒன்றுகூடி ‘‘சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்றனர்.

அப்போது, முதல்வர் கூறிய வாசகத்தை அனைவரும் கூறி உறுதி ஏற்றுக் கொண்டனர்.அதன்படி, ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன். சுயமரியாதை ஆளுமை திறனும் - பகுத்தறிவு பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்” என்று கூறி உறுதிமொழி ஏற்றனர்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Social Justice Day ,Fort , Under the leadership of Chief Minister M.K.Stalin, government employees took Social Justice Day pledge at Fort
× RELATED தமிழ்நாட்டை மொழி, இனம், பண்பாட்டு...