சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாய நிலம் வாங்குவதற்கு மானியமாக ரூ.10 கோடி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2022-2023ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, ‘‘நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு, அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
ரூ.10 கோடி மதிப்பீட்டில் 200 நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள் என்று அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்க ரூ.10 கோடி மாநில அரசு நிதியில் இருந்து நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.