×

திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி விக்ரகங்கள் 23-ம் தேதி பவனி; இரு மாநில அமைச்சர்கள் முன்னிலையில் நடக்கிறது

தக்கலை : கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெறும்   நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரி மாவட்டத்தில் இருந்து சாமி விக்ரகங்கள் 23ம் தேதி புறப்படுகிறது. தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மனாபபுரம் இருந்த போது அரண்மனையில் உள்ள மண்டபத்தில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வந்தது. தற்போது திருவனந்தபுரம் அரண்மனையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் பங்கேற்க 22ம் தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் புறப்பட்டு பத்மநாபபுரம் வந்து சேர்கிறது. 23ம் தேதி காலையில் வேளிமலை குமாரசாமி, பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் கோயிலை வந்தடையும்.

பின்னர் அங்கிருந்து பவனி கேரள போலீசாரின் அணி வகுப்பு மரியாதையுடன் தொடங்கும். முன்னதாக பவனியின் முன்னே கொண்டு செல்லும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகையில் 23ம் தேதி  7.30 முதல் 8.30க்குள் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் தமிழக கேரள  உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.   உடைவாள் கைமாறியதும் அரண்மனை தேவாரக்கெட்டு சரஸ்வதியம்மன் ஆலயம் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்யப்படும்.

அங்கிருந்து சரஸ்வதி தேவி யானை மீது அமர, பல்லக்குகளில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை முருகன் ஆகியோர்  வீற்றிருக்க பெண்களின் தாலப்பொலியுடன் பவனி தொடங்கும். இந்த பவனி அக்.25ம் தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. அங்கு தொடங்கும் நவராத்திரி பூஜையில் சரஸ்வதி தேவி கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், வேளிமலை முருகன் ஆரியசாலை கோயிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோயிலிலும் பங்கேற்கின்றனர். பின்னர் விஜயதசமி முடிந்து  நல்லிருப்பை அடுத்து  அங்கிருந்து விக்ரகங்கள் பவனியாக புறப்பட்டு பத்மனாபபுரம் வந்தடையும்.

Tags : Navratri Festival ,Thiruvananthapuram ,Sami ,Padmanapapuram Palace ,Bhavani , Navratri Festival in Thiruvananthapuram Sami idols from Padmanapapuram Palace 23rd Bhavani; It is happening in the presence of two state ministers
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது