×

நுங்கம்பாக்கம், புழல் பகுதியில் கஞ்சா விற்ற 7 பேர் கைது

சென்னை: நுங்கம்பாக்கம் மற்றும் புழல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின்பேரில், இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி நுங்கம்பாக்கம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம், ஜெகநாதன் தெருவில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்து அவர்களை சோதனை செய்த போது, விற்பனைக்காக கஞ்சா மற்றும் போதைபொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த விஜயரோசன் (28), அண்ணாநகர், 5வது அவென்யூ பகுதியை சேர்ந்த தாமஸ் (27) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சா, மற்றும் 2 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், புழல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த புத்தகரம், புருஷோத்தமன்நகரை சேர்ந்த பிரவீன்குமார் (25), அதேபகுதியை சேர்ந்த ஹேமந்த் சிவனேஷ் (21), விக்ரம் (21), சாந்தகுமார் (19), கொளத்தூர், வேல்முருகன்நகர் கன்னியப்பன் (21), ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா, பணம், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Tags : Puzhal ,Nungambakkam , 7 people were arrested for selling ganja in Puzhal area of Nungambakkam
× RELATED புழல் சிறைச்சாலையில் செல்போன் பறிமுதல்