மதுரை: நீட் ஓஎம்ஆர் விடைத்தாளை பார்வையிட மாணவிக்கு அனுமதி வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெயசித்ரா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 141 வினாக்களுக்கு சரியான விடை அளித்திருந்தேன். ஓஎம்ஆர் சீட் மற்றும் பதில்கள் வெப்சைட்டில் வெளியிடப்பட்டன. எனக்கு 114 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்திருந்தது. எனக்கு 564 மதிப்பெண்கள் கிடைத்திருக்க வேண்டும். இதில் குளறுபடி நடந்துள்ளது. எனவே, நான் தேர்வெழுதிய ஓஎம்ஆர் விடைத்தாளை பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வீ.பவானி சுப்பராயன், நீட் தேர்வு முடிவுகளில் எந்த தவறும் காணவில்லை. மதிப்பெண்ணை சரி பார்த்தால் அரசு அல்லது தனியார் மருத்துவ கல்லூரியில் வாய்ப்பு கிடைக்கும் என மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை இந்த நீதிமன்றம் ஏற்கிறது. மனுதாரரின் ஓஎம்ஆர் விடைத்தாளை நேரில் பார்வையிட தேசிய தேர்வு வாரியம் அனுமதிக்க வேண்டும். ஓஎம்ஆர் விடைத்தாளில் எந்தவித மாற்றமோ, தவறோ நடக்காமல் இருந்தால் மனுதாரருக்கு அதிகளவு அபராதம் விதிக்கப்படும். இதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கையை 2 வாரத்தில் முடிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை செப்.28க்கு தள்ளி வைத்தார்.