×

பங்குச்சந்தை வர்த்தகத்தில் நாட்டின் மிகப்பெரிய வணிக குழுமமான டாடாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது அதானி குழுமம்: 3 ஆண்டுகளில் 1000% வளர்ச்சி..!!

டெல்லி: பங்குச்சந்தை வர்த்தகத்தில் நாட்டின் மிகப்பெரிய வணிக குழுமமான டாடாவை பின்னுக்கு தள்ளி அதானி குழுமம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அதானி நிறுவனங்கள் 1000 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதும் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. உலகின் 2வது பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ள குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானி நிறுவனங்களின் சொத்து மதிப்பு அசுர வளர்ச்சியை பெற்றுள்ளதால், இந்தியாவிலேயே அதிக சொத்து மதிப்பை கொண்ட நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுத்துள்ளது.

நேற்றைய பங்கு சந்தை முடிவில் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 22 லட்சத்து 27 ஆயிரம் கோடியாக இருந்தது. அதே நேரத்தில் டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு 20 லட்சத்து 77 ஆயிரம் கோடியாக இருந்தது. நேற்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி ரூ.9.052 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. அதேநேரத்தில் டாடா குழுமம் 33 ஆயிரத்து 763 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. 7 நிறுவனங்களை கொண்ட அதானி குழுமம், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் 18 லட்சத்து 70 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2019ம் ஆண்டு 2 லட்சம் கோடி ரூபாய் என சந்தை மதிப்பில் இருந்த அதானி குழுமம், மாதம் ஒன்றுக்கு 56 ஆயிரத்து 700 கோடி என லாபம் ஈட்டி சொத்து மதிப்பை 18 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக பெருக்கியுள்ளது.

அதே காலகட்டத்தில் 27 நிறுவனங்களை கொண்டுள்ள டாடா  குழுமம், 9 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. 3 ஆண்டு காலகட்டத்தில் ரிலையன்ஸ் குழுமம் 7 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. அதானி வில்மர் பங்கு விலை அதிரடியாக உயர்ந்ததே அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர முக்கிய காரணமாக உள்ளது. இதேபோன்று அதானி கேஸ் நிறுவன மதிப்பு, 700 சதவீதம் உயர்ந்துள்ளது. அதானி என்டேர்பிரைசஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் மதிப்பு 400 சதவீதம் பெருக்கியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் அம்பானி மற்றும் அதானி குழுமங்களுக்கு இடையிலான சொத்து மதிப்பு வித்யாசம் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.


Tags : Tata ,Adani Group , Stock market, Tata, Adani group, 1000% growth
× RELATED சொல்லிட்டாங்க…