புதுடெல்லி: டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக பாஜ தொடர்ந்து குற்றம்சாட்டி கூறி வந்தது. ஆளுநர் சக்சேனாவிடமும் பாஜ தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து டெல்லி துணை முதல்வர் சிசோடியா வீடு உள்ளிட்ட 40 இடங்களில் கடந்த மாதம் 19ம் தேதி சோதனை நடத்தியது.
இந்த சோதனைகளுக்கு பின்னர், சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், கலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை நேற்று நாடு முழுவதும் 40 இடங்களில் மீண்டும் சோதனை நடத்தியது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் டெல்லி-என்சிஆர் ஆகிய நகரங்களில் உள்ள மதுபான விற்பனை உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சப்ளை நெட்வொர்க் உள்ளவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.