×

கே.கே.நகர், ராமாபுரம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்: வாரியம் அறிவிப்பு

சென்னை: வளசரவாக்கத்தில் பிரதான குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால் கே.கே.நகர், ராமாபுரம் உள்ளிட்ட சுற்று பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வளசரவாக்கம், ராமகிருஷ்ணா நகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் 400 மி.மீ விட்டமுள்ள உந்துகுழாயுடன் ஆற்காடு சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பில் அமைந்துள்ள 1200 மி.மீ விட்டமுள்ள பிரதான குழாயினை இணைக்கும் பணிகள் நாளை காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால், பகுதி-10க்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர், கே.கே.நகர், நெசப்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை பகுதியில் ஜோன்ஸ் ரோடு வரை மற்றும் பகுதி-11க்குட்பட்ட ராமாபுரம், வளசரவாக்கம், மதுரவாயல், தாய்சா குடியிருப்பு, கே.கே.நகர் மற்றும் சூளைமேடு குடிநீர் பகிர்மான நிலையத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு குழாயின் மூலமாக வழங்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக பகுதி-10க்குட்பட்ட பொதுமக்கள் பொறியாளரை 8144930910 என்ற எண்ணிலும், பகுதி-11க்குட்பட்ட பொதுமக்கள் பொறியாளரை 8144930911 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Nagar ,Ramapuram , KK Nagar, Ramapuram drinking water supply to stop tomorrow: Board notice
× RELATED முதலியார்பேட்டையில் குழு லோன் வாங்கி தருவதாக மோசடி செய்த பெண் கைது