சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2013ம் ஆண்டு நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார சமுதாயத்தினரை பழங்குடியின பட்டியலில் இணைக்கும் வகையில், 1950ம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் சட்டீஸ்கர் பழங்குடியின சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பட்டியலில் இருந்ததால், போட்டியிட முடியாமல் முடங்கிப் போன நரிக்குறவர்களுக்கு இந்த சட்டத் திருத்தம் நம்பிக்கை அளித்தது. இந்நிலையில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பின்தங்கியோர் பட்டியலில் இருந்து தமிழகத்தின் பழங்குடியின பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமர் மோடியை கடந்த மார்ச் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
தமிழகத்தில் கல்வியறிவின்மை, சுகாதார சவால்கள் மற்றும் வேலையின்மை காரணமாக போராடுகிற தமிழகத்தின் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரிக்குறவர், குருவிக்கார சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தமிழக காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். அதேசமயம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பழங்குடியின திருத்த மசோதா கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தொடர்ந்து போராடி வந்த நிலையில், தற்போது நரிக்குறவர் சமுதாயத்தைப் பழங்குடியின பட்டியலில் ஒன்றிய அரசு சேர்த்துள்ளது என்பது தான் உண்மை. தாங்கள்தான் இந்த சாதனையை செய்ததாக சுய தம்பட்டம் அடித்துக் கொள்ள பாஜவினருக்கு தகுதியே கிடையாது.