திருவனந்தபுரம் : கேரளாவில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் கடிக்கு இரையாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாலைகளில் செல்பவர்களையும், வீடுகளில் புகுந்தும் நாய்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களில் நாய் கடித்து ஒரு கல்லூரி மாணவி உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வெறிபிடித்த தெரு நாய்களை கொல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஏராளமான பொது நலன் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.