×

இந்தியாவின் பாதுகாப்பு கூட்டாளிகளில் நாங்கள் முதல் இடத்தில் இருக்கிறோம்: பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பேச்சு

புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு கூட்டாளிகளில் பிரான்ஸ் முதலிடத்தில் இருக்கிறது என பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா கூறினார். பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். அப்போது இருதரப்பு நலன், மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தியாவுடனான நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அனுப்பியிருந்த செய்தியை, பிரதமர் மோடியிடம் கேத்தரின் எடுத்துரைத்தார்.

அப்போது, பாரீஸ் மற்றும் ஜெர்மனியில் அதிபர் மேக்ரோனுடன் நடந்த சந்திப்புகளை பிரதமர் மோடி நினைவு கூர்ந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த கேத்தரின், பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெய்சங்கர் இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினார். பின்னர் பேசிய பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா கூறியதாவது: ஒரு அமைச்சராக இந்தியா வருவது இதுவே முதன்முறை.

எனது முதல் பயணமாக இந்தியாவை தேர்வு செய்தேன். இந்தியாவின் பாதுகாப்பு கூட்டாளிகளில் பிரான்ஸ் முதலிடத்தில் இருக்கிறது. பாதுகாப்புத் துறையில், வேறு எந்த நாடும் வழங்காத அளவிற்கு நவீன தொழில் நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதை நினைத்து பிரான்ஸ் பெருமை கொள்கிறது. உலக அமைதி மற்றும் ஸ்திர தன்மையையே இந்தியாவும் பிரான்சும் விரும்புகின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Tags : India ,Foreign Minister ,France , We are number one among India's defense partners: French foreign minister speech
× RELATED சொல்லிட்டாங்க…