சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரனுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சென்னையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இரண்டு அணியாக பிரிந்து செயல்படும் அதிமுகவின், ஒரு பிரிவான ஓபிஎஸ்சுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுகள் எடப்பாடிக்கு சாதகமாக வந்தாலும், உச்ச நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்று அதிமுகவை மீண்டும் தன்வசம் கொண்டு வர ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து போராடி வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு திடீரென சந்தித்து பேசினார். அப்போது, தற்போதைய அதிமுக நிலவரம் குறித்து இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு அண்ணா பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் சென்று அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இன்று காலை 10.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் சென்று சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தற்போது பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக கட்சியில் நீடித்தாலும், எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். சில வாரங்களுக்கு முன் சசிகலாவும் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசினார். இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு திடீரென ஆதரவு அளித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.