சென்னை: நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் ஆகிய சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒன்றிய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் சமூக நீதியை முழுமையாக உறுதி செய்ய, அவர்களுக்கு உடனுக்குடன் சாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.
மலை பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் இணைப்புகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.