×

ரூ.200 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஆஜர்

டெல்லி : சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜர் ஆனார். தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக விசாரணை தீவிரமடைந்து வருகிறது. இதுகுறித்து டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே நடிகை நோரா ஃபதேஹியிடம்  விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக அமலாக்க துறையின் துணை குற்றப் பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் சுகேஷிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் வாங்கியதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, டெல்லி போலீசார் ஜாக்குலினுக்கு 2 முறை சம்மன் அனுப்பினர். அவர் ஆஜர் ஆகாத நிலையில் 3-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆனார். சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாக்குலினை அறிமுகப்படுத்தி வைத்த பிங்கி ராணியும் ஆஜர் ஆனார். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் மோசடி நடந்த போது ஜாக்குலினும் சுகேஷும் எத்தனை முறை சந்தித்து உள்ளார்கள், அவர்களுக்கு இடையேயான உறவு என்ன உள்ளிட்டவை குறித்து 6 மூத்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இரண்டு மூன்று நாட்கள் விசாரணை தொடரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Jacqueline Fernandez , Fraud, case, actress, Jacqueline Fernandez, to be investigated, Aug
× RELATED ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் நடிகை...