உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் சோதனை
வாணியம்பாடி: வாணியம்பாடியில் உள்ள உணவகங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி பயன்படுத்தப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் சோதனை நடத்தினார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையம், பஜார் பகுதி மற்றும் ஆற்றுமேடு பகுதியில் செயல்பட்டு வரும் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உணவு, தரமற்ற எண்ணெய் உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்படுகிறதா என்று சுகாதாரத்துறை சார்பில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாணியம்பாடி உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) பழனிச்சாமி இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 5 கிலோ, அதிக வண்ணம் பூசப்பட்ட கோழி இறைச்சி 2 கிலோ, லேபிள் இல்லாமல் பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வத்தல் 3 கிலோவை பறிமுதல் செய்தும்,
அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்டு வந்த சில கடை உரிமையாளர்களை உடனடியாக லைசென்ஸ் எடுக்கும்படி அறிவுறுத்தினார்.