திருவண்ணாமலை: கலசபாக்கம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ பெ.சு.திருவேங்கடம் நேற்று முன்தினம் காலமானார். அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பெ.சு.திருவேங்கடம் (89). இவர், உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். அதைத்தொடர்ந்து, அவரது சொந்த ஊரான கலசபாக்கம் அடுத்த பெரியகிளாம்பாடி கிராமத்தில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இவர் 4 முறை எம்எல்ஏவாக பணியாற்றியவர். திமுக சொத்து பாதுகாப்பு குழு செயலாளராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மறைந்த பெ.சு.திருவேங்கடம் உடல் அடக்கம் இன்று காலை 9 மணி அளவில், அவரது சொந்த கிராமமான பெரியகிளாம்பாடி கிராமத்தில் நடக்கிறது.