×

நாட்டில் முதன்முறையாக அறிமுகம் போக்சோ வழக்கின் நிலையை பாதிக்கப்பட்டவர்கள் அறிய புதிய திட்டம்: தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை

மதுரை: நாட்டிலேயே முதன்முறையாக போக்சோ வழக்கின் நிலையை பாதிக்கப்பட்டவர்கள் வாட்ஸ் அப் மூலம் அறியும் புதிய வசதி 4 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மாவட்டங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க்  தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகுகின்றன. இதனால் தமிழகத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் இதுபோன்ற குற்றங்கள் குறைவு. ஆனாலும் குற்றங்களே நடக்காமல் இருக்க தமிழக போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதில் தென் மாவட்டங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை களைய தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அதிரடி நடவடிக்களை எடுத்து வருகிறார். இது குறித்து தென் மண்டல போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஐஜியின் உத்தரவை அடுத்து பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க போலீசார் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் அதீத கவனத்துடன் கையாளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பந்தமான குற்றங்களில் வழக்குப்பதிவு செய்தல், குற்றவாளிகளை கைது செய்தல் மட்டுமல்லாமல், குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியான உரிமைகளையும், சலுகைகளையும் முறையாக கொண்டு சேர்க்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கு பதிவு செய்தவுடன், தாமதமும் இன்றி படிவம் ஏ, ஒன்று புகார்தாரர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதில் பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சேவைகள் மற்றும் உரிமைகள் எவை எல்லாம் உள்ளது என அவர்களுக்கு எடுத்துரைக்கும் படிவம் ஏ யின் மூலம் எழுந்து மூலமாகவும் தெரியப்படுத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் இழைக்கப்பட்ட குற்றம் சம்பந்தமாக ஆரம்ப கட்ட மதிப்பீடு அறிக்கை ஒன்றை படிவம் பி, மூலம் விசரணை அதிகாரியால் தயார் செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் குழந்தைகள் நல குழுமத்திற்கும் அனுப்பப்படுகிறது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சூழ்நிலை மற்றும் வழக்குகளுக்கு ஏற்றவாறு தேவைப்படும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்தது முதல் நீதிமன்ற விசாரணை முடியும் வரை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனிருந்து உதவி புரிய ஒரு நபரை குழந்தைகள் நல குழுமத்திடம் இருந்து வேண்டி பெறலாம் என்ற சட்ட வழிவகையை எடுத்துரைத்து, அவற்றை பெற்றுத்தர பாதிக்கப்பட்டவர்களுடன் உடனிருந்து காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இவற்றோடு மட்டுமல்லாமல் அரசால் வழங்கப்படும் நிவாரணம், இடைக்கால நிவாரணம் ஆகியவற்றை நீதிமன்றம் மூலம் பெற்றுத்தர அனைத்து உதவிகளையும் காவல்துறை செய்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை செய்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. குற்றவாளிகள் ஜாமீன் மனு தாக்கல் செய்யும்போது விசாரணை வரும் நாளை முன்கூட்டியே பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது அவரின் பெற்றோருக்கோ அல்லது புகார்தாரருக்கோ தெரியப்படுத்தி, ஜாமீன் விசாரணை வரும் நாளில் அவர்களோ அல்லது அவர்கள் சார்பாக அவர்களால் நியமிக்கப்பட்ட யாரேனும் ஒருவரோ நீதிமன்றத்தில் ஆஜராகி எதிரிகளை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பதை எடுத்துக் கூறியும், தன்மைக்கேற்றவாறு எழுத்துப் பூர்வமாக அவர்களுக்கு தெரிவித்தும் எதிரிகள் ஜாமீனில் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதோடு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், இதர பணியிடங்களிலும் மேற்கொள்வதுடன் பாதிக்கப்பட்ட நபர்கள் துணிச்சலுடன் புகார் அளிக்கவும், அளித்த புகாரின் மீது துரித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளில் அடுத்த கட்டமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில்(போக்சோ), வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது, வழக்கு விசாரணைக்கு வரும் நாட்களின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புார்தாரர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய வகையில் அவர்களின் அலைபேசிக்கு வாட்ஸ் அப் அல்லது குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தும் முறை முதன் முறையாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறை தொடர்ந்து கண்காணிக்கவும், செயல்படுத்தவும் மாவட்டத்திற்கு ஒரு குழு உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களால் முறையிடப்பட்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் நிலை பற்றியும், அவ்வழக்கின் போக்கு பற்றியும் தெரியாமல் இருந்து வந்தனர். தற்போது, அந்தநிலை மாற்றப்பட்டு அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழக்கில் நடவடிக்கைகள் தொடர்வது குறித்த மனநிறைவு அடைவதுடன், வழக்குகளின் தண்டனை விகிதமும் அதிகரித்து, குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு பயம் ஏற்பட்டு, இக்குற்றங்கள் பெருமளவில் குறையவும் அதிக வாய்ப்பு உள்ளது என்றார்.

இது குறித்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறும்போது, இந்த முறை திருநெல்வேலி சரகத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக அமல்படுத்திக் கொண்டிருக்கும் டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்பிக்கள் சரவணன்(திருநெல்வேலி), கிருஷ்ணராஜ்(தென்காசி), பாலாஜி சரவணன்(தூத்துக்குடி), ஹரிகிரன் பிரசாத்(கன்னியாகுமரி) ஆகியோர்கள் பாராட்டுக்குறியவர்கள். விரைவில் தென் மண்டலத்தின் பிற மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் அடுத்தடுத்து இம்முறை செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

* நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன.
* தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
* மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் குற்றங்கள் குறைவு. ஆனாலும் குற்றங்களே நடக்காமல் இருக்க தமிழக போலீஸ் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Tags : POCSO ,South Zone ,IG ,Azra Karg , A new program for victims to know the status of POCSO cases introduced for the first time in the country: South Zone IG Azra Karg action
× RELATED பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டுகள்...